கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் 28 வயதான ககன்ராவ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 25 வயதான மேகனா ஜாதவ் என்ற பெண்ணிற்கும் ககன்ராவுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மகிழ்ச்சியுடன் இருவரும் திருமண வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால், ஆரம்பித்த சிறிது காலத்திலேயே ககன்ராவுக்கும் மேகனா ஜாதவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மேகனா ஜாதவ், தனது கணவரிடம் காரணமே இன்றி அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ககன்ராவ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சரிவர வேலைக்குச் செல்லாமலும், தூக்கமின்றியும் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கணவன்-மனைவியிடையேயான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த 9-ம் தேதி இரவு மேகனா ஜாதவ் கணவர் ககன்ராவிடம் மீண்டும் பிரச்சனை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் விரக்தியடைந்த ககன்ராவ், இனி வாழவே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதன்படி தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்த அவர், தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அந்த நேரத்தில் மேகனா வீட்டில் இல்லை என்றும், அவர் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே ககன்ராவ் தற்கொலை செய்துகொண்ட விஷயம் தெரிந்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த கிரிநகர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ககன்ராவின் சகோதரி மேகனா ஜாதவ் மீது கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “எனது அண்ணன் ககன்ராவின் சாவுக்கு அவரது மனைவி மேகனா ஜாதவ்தான் முதன்மையான காரணம்” என்று கூறியுள்ளார். மேலும் திருமணமான நாள் முதல் மேகனா ககன்ராவை மனரீதியாகக் கொடுமைப்படுத்தி டார்ச்சர் செய்து வந்துள்ளார் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகுதான் ககன்ராவ் தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ககன்ராவின் செல்போனில் உள்ள மெசேஜ்கள், அழைப்பு பதிவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.