executive expressed dissatisfaction with the chaos prevailing in DMK in arani constituency
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடுகசாத்து கிராமத்தைs சேர்ந்தவர் ஜிவி என்கிற ஜி. வெங்கடேசன். திமுகவை சேர்ந்த இவர், இதற்கு முன்பு ஆரணி ஒன்றிய திமுக செயலாளராகவும் ஆரணி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பிப்ரவரி 11ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தான் திமுகவில் 35 ஆண்டுகளாக இருப்பதாகவும் தன்னை நிர்வாகிகள் சிலர் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர், ‘2011, 2016, 2021 என தொடர்ச்சியாக மூன்று முறை ஆரணி சட்டமன்றத் தொகுதியில் திமுக தோல்வி அடைந்து வருகிறது. இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை யாருமே ஆராயவில்லை, தலைமைக்கு தவறான விவரங்களை கூறுகின்றனர். இதுக்குறித்து முறையிட முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து முறையிட முயன்றால் என்னை சந்திக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். அதனால் தான் உங்கள் மூலம் கோரிக்கை விடுக்கிறேன். சந்திக்க விரும்பவில்லை என்றால் நான் கட்சி மாறுவதை தவிர வேறு வழி இல்லை’ என குறிப்பிட்டிருந்தார். இவர் பேசிய பேச்சு திருவண்ணாமலை திமுக மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ஆரணி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான சின்ன குழந்தை வடுக்குசாத்து கிராமத்தைச் சார்ந்தவர். அவரை எதிர்த்து அரசியல் செய்து வடுக்குசாத்து, தச்சூர், பாளையம் உட்பட அந்தப் பகுதிகளில் கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்தான் வெங்கடேசன். திமுகவின் முன்னாள் எம்எல்ஏவும் முன்னால் மாவட்ட செயலாளருமான சிவானந்தத்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். சிவானந்தம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் அவரது ஆட்களை படிப்படியாக ஒதுக்கி வந்தனர். அந்த வரிசையில் தான் இவரையும் ஒதுக்கினார்கள் மாவட்டத் துணை செயலாளர் விண்ணமங்கலம் ரவி, ஒன்றியச் செயலாளராக உள்ள கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அன்பழகன் போன்றோர்.
இப்போது ஆரணி தொகுதியில் உச்சத்தில் உள்ளது கோஷ்டி பூசல். இதனை சரி செய்ய எந்த முயற்சியும் நிர்வாகிகள் எடுக்கவில்லை, இதுதான் பிரச்சனைக்கு காரணம். வெங்கடேசன் செல்வது போல் தான் தொகுதி நிலவரம் உள்ளது. கடுமையாக உழைக்கவில்லை என்றால் நான்காவது முறையாகவும் இங்கு தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கூறுகின்றனர்.
Follow Us