வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கனமழை காரணமாக ஏரிக்கான நீர்வரத்து 1, 300 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 22 அடியை எட்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (03.12.2025) காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us