தனது முதல் சுற்றுப்பயணத்திற்காக இன்று(13/09/2025) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேருந்து மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவரது வாகனத்தை தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இதனால் பேருந்து ஊர்ந்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை விஜய்யின் ரசிகர்கள் பின்பற்றாத சூழல் ஏற்பட்டுள்ளது.
போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். போலீசார் சொல்லியும் கேட்காத நிலை அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு பரப்புரை செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதியான மரக்கடை பகுதிக்கு அவருடைய வாகனம் வந்துள்ளது.இன்னும் சற்றுநேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், 'நடிகர் என்பதால் அவரைப் பார்க்கப் போகிறார்கள். நானே நடிகர் விஜய் நடிப்பை ரசித்து பார்த்துள்ளேன். 2011-ல் வடிவேலு தேர்தல் பரப்பரைக்கு வந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. அவரது நிலை தற்போது எப்படி உள்ளது? மக்கள் தெளிவாக உள்ளனர் படம் பார்க்கவும் கட்சி ஆரம்பித்தால் அவர்களை பார்க்கவும் போவார்கள்'' என்றார்.