அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மறுபுறம் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு இயக்கத்தை நடத்திவரும் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று கோரிக்கையை வைத்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளரான ரஞ்சித்குமார் என்பவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் மேடையில் பேசுகையில்,''எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இணையாவிட்டால் தமிழகத்தில் மீண்டும் மூன்றெழுத்து கட்சியின் ஆட்சி தான் நடக்கும் என சூசகமாக தெரிவித்தார். மேலும் 'எடப்பாடி பழனிசாமி காலிலேயே விழக்கூட  தயார் தயவு செய்து எங்களை சேர்த்துக்கோங்க' என கோரிக்கை விடுத்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.