பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 1.11 கோடி மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisment

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,117 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

Advertisment

இதில், 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,835க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 2,910க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,670க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 2,700க்கும் விற்பனையானது. இதில், மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 340 கிலோ எடையிலான 4,039 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 9 லட்சத்து 54 ஆயிரத்து 440 ஆகும்.

அதேபோல், உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம், முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 1,620க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 1,740க்கும் விற்பனையாகின. மொத்தம் 2 ஆயிரத்து 940 கிலோ எடையிலான 98 மூட்டைகள் விற்பனையாகின. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 360 ஆகும். நாட்டுச் சர்க்கரை, வெல்லம் இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரத்து 800க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment