மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் உள்ள தென்னூர் உழவர் சந்தை அருகே வெகு விமரிசையாக ஆரம்பமானது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வைகோவுடன் சிறிது தூரம் நடந்தும் சென்றார். சமூக நீதி, போதை ஒழிப்பு, மத நல்லிணக்கம், இளைஞர்களை அடிமையில் இருந்து காப்பாற்றுதல் ஆகிய குறிக்கோள்களை முன்வைத்து நடக்கும் இந்த 11 நாள் பயணம் ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் முடிவடைகிறது. 

Advertisment

தொடக்க நாட்களில் திருச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சியினரும் பொதுமக்களும் உற்சாகமாக இணைந்தனர். ஜனவரி 4ஆம் தேதி வைகோ சிலம்பம் சுற்றி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அடுத்தடுத்த நாட்களில் புதுக்கோட்டை வழியாகப் பயணம் சென்ற போது சாலையோரம் அமர்ந்து தொண்டர்களுடன் நெருக்கமாக உரையாடினார். இடைவேளைகளில் கிராமப் பெண்கள் உள்ளிட்ட மக்கள் வைகோவைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.  

Advertisment

ஜனவரி 7ஆம் தேதி காலை, சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள புளிதிபட்டியில் நடைபயணத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மாவட்ட செயலாளர் மனோகரன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிரேன் உதவியுடன் ராட்சத மாலை அணிவித்து வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

vaiko-flower-1

மொத்த நடைபயணத்தில் தற்போது வரை வைகோ தனது தொண்டர்களுடன் கால் பகுதி தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார். வைகோ தினமும் 15 முதல் 17 கி.மீ வரை உற்சாகத்துடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியின் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அங்கமாகவும் இப்பயணம் உள்ளது. மதுரை நோக்கி தொடரும் இந்நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Advertisment