தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியில் தீவிரமாகியுள்ளன. பிரதான எதிர்கட்சியான அதிமுக 234 தொகுதியிலும் கட்சியினரிடம் விருப்பமனு வாங்கிக்கொண்டு உள்ளன. வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை விருப்பமனு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் சென்னையிலுள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் விருப்பமனு தந்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியை சேர்ந்த அதிமுகவின் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன், தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி 120 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட ரூபாய் ஒரு தொகுதிக்கு 15,000 என 120 தொகுதிக்கு 18 லட்சத்துக்கு வரைவோலை எடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தந்துள்ளார். அதோடு ஆரணி சட்டமன்றத் தொகுதியில் தான் போட்டியிட ஆரணி ஜி.வி. கஜேந்திரன் விருப்ப மனு தந்துள்ளார்.
அதே சமயம் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அது என்ன 120 தொகுதிகளில் மட்டும் இ.பி.எஸ் பெயரில் விருப்பமனு தரப்பட்டுள்ளது என கஜேந்திரன் தரப்பினரிடம் கேட்டபோது, தமிழ்நாட்டில் 117 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றால்தான் ஆட்சியமைக்கமுடியும். அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என 120 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் பணம் செலுத்தியுள்ளார் என்கிறார்கள்.
Follow Us