செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மான்புமிகு எதிர்கட்சி தலைவர் பெரும் மதிப்பிற்குரிய திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே” எனக் குறிப்பிட்டார்.
அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய சகோதரர் திரு டிடிவி தினகரன் அவர்களே” எனப் பேசியிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது செய்தியாளர் ஒருவர், “9 ஆண்டுகளுக்குப் பிறகு டிடிவி தினகரன் உடன் மீண்டும் பக்கத்தில் இருந்து பயணிக்கப் போகிறீர்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள். நிலைமை எப்படி இருக்கிறது?” என எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசுகையில், “இந்த கேள்வியைக் கேட்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். எப்படியாவது ஒரு குழப்பத்தை உண்டாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு எல்லாம் தெரியும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு எண்ணமே இல்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் நானும், மரியாதைக்குரிய டி.டி.வி. அவர்களும் (தினகரன்) தெளிவுபடுத்தி விட்டோம். நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றோம். நாங்கள் எல்லாம் அம்மா (ஜெயலலிதா) வளர்த்த பிள்ளைகள்.
என்னையும் சரி அவரையும் சரி எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருப்பதாகச் சொன்னார்கள். அவ்வாறு கருத்து வேறுபாடு இருந்தது. கூட்டணியில் எப்போது இணைந்தோமோ அப்போதே அத்தனையும் மறந்துவிட்டோம். இனி எங்களுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அவருடைய (டிடிவி தினகரன்) நிலைப்பாடு. ஒற்றுமையாகச் செயல்படுகிறோம்” எனத் தெரிவித்தார்.
Follow Us