ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும்  திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆணையின்படி, மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும், 'ஊராட்சி செயலாளர்கள்' மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில்' பணிபுரியும் 'பணித்தளப் பொறுப்பாளர்கள்' மற்றும் 'பணியாளர்கள்' வீடு வீடாகச் சென்று,  திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், திமுக அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்கள், 125 நாள் வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

Advertisment

மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன். கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்காக பணிபுரியும் கிராம செயலாளர்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை,  திமுக அரசு தங்களது சுய லாபத்திற்காக, தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.