தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

Advertisment

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி இன்று (24.08.2025) பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நேற்று (23.08.2025) முதல் 3 நாட்கள் திருச்சியில் தங்கி 9 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஒட்டலில் தங்கி உள்ளார். அதே சமயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு திருச்சி வருகை புரிந்தார். 

இவர், திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஒட்டலில் தங்கி ஓய்வெடுத்து விட்டு இன்று காலை அமமுக கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேனிக்கு சென்று விட்டார். திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் இன்று தங்கி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சம்பவம் அதிமுக, அமமுக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.