EPS harsh criticism against DMk Government
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 7.7.2025 முதல் 21.7.2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 07.07.2025 அன்று மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை ஒட்டி, அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடல் வெளியிடுவதற்கான நிகழ்ச்சி இன்று (05-07-25) நடைபெற்றது.
இந்த நிலையில், சுற்றுப்பயணத்தை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளரும் எடப்பாடி பழனிசாமியும் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ் நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை. தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழ்நாடு இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது. மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது. ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை. தன் பெண்டு - தன் பிள்ளை தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக இருக்கின்றன. அரசாங்கத்தின் அத்தனை பாகங்களிலும் மக்கள் மீதான அலட்சியம் குடியேறிவிட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனத்தில் நிறைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே, ஏன்?. ஒரு சில கல்விக் கூடங்களும், சில சமூக ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக தொடர்ந்து செயல்படுவது ஏன்? அமைதிப்பூங்காவான தமிழ் நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப் பொருள் பெருக்கத்தாலும் அல்லலுறுவது ஏன்? அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால்? அரசின் அச்சாணியாக இயங்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்படவேண்டிய செயல் அல்லவா? தமிழகத்தில் ‘கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன்’ இல்லாத துறைகளே இல்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா? படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? இப்படி, இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா? சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்துவிட்டன. முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோலாட்சியில் இருக்கிறோமா என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் தி.மு.க. அரசாங்கம் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வியில் கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்தும் மூடர்களின் கொட்டத்தை அடக்கி வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணைந்து வர அழைக்கிறேன். அமைதியான தமிழ் நாடு வளமான தமிழ் நாடு, நிறைவான தமிழ்நாடு; இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம். முடியாத கொடுமைக்கு முடிவுகட்டுவோம். விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.