சென்னை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல் மின் திட்ட கட்டுப்பானப் பணிகள் ஊரணம்பேட்டு பகுதியில் நடந்து வருகிறது. இதில், தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி உள்ள இரண்டு அலகுகள் மூலம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலைய பணிகள் கிட்டத்தட்ட 70% முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று மின் நிலையத்தில் பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு கட்டமாக, கிட்டத்தட்ட 30 அடி உயரத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென முகப்பு சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த பெரும் விபத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ளா ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தற்போது வரை 9 தொழிலாளர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பணிகள் முடிந்த நிலையில் கரி கவர் பண்ணி வைக்கக்கூடிய பகுதியில் 45 மீட்டரில் 10 நபர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொண்ட போதிலும் திடீரென விழுந்ததில் 10 பேர் கீழே விழுந்து இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் சைடில் தொங்கிக் கொண்டிருந்தார். 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பணியாளர்கள் முழுவதும் அஸ்ஸாம் போன்ற மாநிலத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. அனைத்து ஏற்பாடுகளும் செய்ய இருக்கிறோம். சுகாதாரத் துறையிலும் தேவையான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் காயத்துடன் தப்பியுள்ளார். முதற்கட்ட தகவலில் அங்கு வேறு யாரும் இல்லை. அந்த பகுதியில் சுமார் இரண்டு பெரிய யூனிட் முடிக்கும் தருவாயில் 70 விழுக்காடு பணி செய்யும் பொழுது சுமார் 3700 பணியாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குறிப்பிட்ட இடத்தில் 10 பணியாளர்கள் இருக்கும் பொழுது நடந்த விபத்தில் ஒன்பது இறந்துள்ளனர். காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதற்குரிய நடவடிக்கைகளை அவற்றை எடுத்த வருகின்றனர். பேக்டரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனியாக இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்'' என்றார்.