Advertisment

எதிர்பாராதவிதமாக உயிரிழந்த பொறியாளர்; நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காவல்துறையின் செயல்!

cd-police

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையா நகரில் பலராமன் (வயது 65) கட்டிட பொறியாளர். இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அதேபகுதியில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் கட்டி விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியாளரின் நடவடிக்கை பிடிக்காததால் மனைவி மற்றும் குழந்தைகள் தனியாக பிரிந்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பலராமன் கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டு அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.  

Advertisment

இவரது உடலை பெற்றுக் கொள்ள யாரும் முன் வராததால் அண்ணாமலை நகர் காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து காவல் துறையினர் பலராமனுடன் கட்டிட வேலையில் பணியாற்றிய மேஸ்திரி, அப்பகுதியில் இருந்தவர்களின் முன்னிலையில் அவர் வசித்த வீட்டை சோதனை செய்தனர். வீட்டில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் விபரம், 74 சவரன் நகைகளும் ரூ 1.5 லட்சம் பணமும், ரூ 2 மதிப்பிலான சொத்து பத்திரம்  இருந்தது. இதனை கைப்பற்றிய காவல் துறையினர் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இது குறித்த தகவல் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. பின்னர் காவல் துறையினர் உயிரிழந்த பலராமனின் மனைவி மற்றும் உறவினர்களை தேடி சென்னை சென்றனர்.  அப்போது கிடைத்த தகவலின்படி சென்னை பொத்தேரி திருவள்ளுவர் தெருவில் வசித்த பலராமனின் மனைவி இந்திராவை (வயது 48) கண்டுபிடித்து தகவலை கூறினார். பின்னர் இந்திரா மற்றும் அவரது மகன் முகேஷ்குமார் (22) அவரது மகள் மீரா (19) ஆகியோர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு செப் 24ஆம் தேதி மாலை 7 மணிக்கு வந்தனர். அவர்களிடம் அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ், ராம்குமார், காவலர்கள் மணிகண்டன், ரமேஷ், ஆனந்த், பிரபா, தினகர் ஆகியோர் அவர்களின் உடமையான ரூ 2 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள் மற்றும் 74 சவரன் நகைகள், ரூ 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை ஒப்படைத்தனர்.  இதற்கு பலராமனின் குடும்பத்தினர் காவல்துறையினரின் நேர்மையான பணிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.  

இந்த சம்பவத்தை அறிந்த அனைத்து தரப்பினரும் அண்ணாமலை நகர் காவல் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் பலராமன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சில நேரங்களில் நடந்து கொண்டவிதம், பணம் விஷயத்தில் மனைவி, பிள்ளைகளிடம்  மிகவும் கடுப்பாக சிடுசிடுவென பேசியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் பலராமனுடன் பணியாற்றிய கட்டிட தொழிலாளர்களுக்கு கூட அவர் எந்த உதவியும் செய்யாமல் கிழிந்த உடையணிந்து பணம், சொத்துகளை சேர்ப்பதிலையே குறியாக இருந்துள்ளார் என கூறுகின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சந்தோஷமாக வாழ்கையை நடத்தாமல் பணத்தையும், சொத்தையும் சேர்ப்பதில் குறியாக உள்ளவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு உதாரனமாகும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Advertisment

கோடிக்கணக்கான சொத்து, நகை மற்றும் பணத்துடன் உயிரிழந்த பொறியாளரின் உடலை உரிமை கோர யாரும் இல்லாததால் அண்ணாமலை நகர் காவல் துறையினரின் முயற்சியால் உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் கோடி கணக்கான சொத்து பத்திரம் மற்றும் கோடிக்கணக்கான நகைகள் பணத்தை ஒப்படைத்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காவல்துறையினருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ENGINEER chidamparam Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe