Enforcement Directorate freezes Anil Ambani's house
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில் அம்பானியின் சொத்துக்களை மீண்டும் முடக்கியது அமலாக்கத்துறை. இந்திய வங்கிகளிடமிருந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, பின்னர் அதனைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை இவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன்படி, பிரபல ‘எஸ்’ வங்கியில் 11,000 ஆயிரம் கோடி கடனாகப் பெற்ற இவர், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பின்னாளில், இந்த கடனில் ஒரு பகுதி வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. அதோடு, தொழில் நிமித்தமாகக் கடனாகப் பெற்ற பணத்தை, சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
இதுவரை, இந்திய வங்கிகளிடமிருந்து கிட்டத்தட்ட 40,000 கோடிகளைக் கடனாகப் பெற்ற இவர், கடனை திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார் என அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில், இவரது சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி இருந்தது. அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 9000 கோடிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மும்பையில் பாலிஹில் உள்ள அவரது வீட்டையும் அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். 66 மீட்டர் உயரமும், 17 அடுக்குமாடிகளையும் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு ரூ.3,716 கோடிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அனில் அம்பானி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.15,700 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்முறை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். விரைவில் அவரிடம் 2-ஆவது முறையாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதனிடையே, தன் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லப்போவதில்லை என அனில் அம்பானி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us