employees washed the room with dung for dalit branch manager used it
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் கிளை மேலாளராகப் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பயன்படுத்திய அறையில் தீட்டு ஏற்பட்டதாக அங்கு பணியாற்றும் சக ஊழியர்கள் கூறியுள்ளனர். அந்த தீட்டைக் கழிப்பதற்கு அங்கு பணியில் இருப்பவர்கள் அவர் பயன்படுத்திய, அந்த அறையை மாட்டுச் சாணத்தால் கழுவியுள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அரசு அலுவலகங்களில் சாதிய பாகுபாடுகள் கடைப் பிடிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. புகாரையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்துத் துறைச் செயலர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஐந்து நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, கோவையில் சில மாதங்களுக்கு முன்பு சாதிய தீண்டாமை காரணமாக, அரசு பேருந்து பட்டியலின மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அலுவலகத்தை சாணத்தால் கழுவும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us