திருச்சி, செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவீண்குமார், கட்டிட மின் வயரிங் தொழிலாளி, மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற விண்ணப்பித்தார். இதற்காக, திருச்சி மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளானந்தம் (வயது 48) என்பவரை அணுகியபோது, கடந்த 08.07.2025 அன்று அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரவீண்குமார் 09.07.2025 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10.07.2025 அன்று துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது, வணிக ஆய்வாளர் அருளானந்தம், பிரவீண்குமாரிடமிருந்து 10,000 ரூபாய் லஞ்சப் பணத்தைப் பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.