ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம், முன்பின் அறிமுகமில்லாத நபர் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம் நயமாகப் பேசி டிரேடிங் செய்யச் சொல்லியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக அந்த நபரின் பேச்சை நம்பி, அந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஆன்லைனில் ரூ.2.50 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில், அந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் தனது வாலெட்டில் இருந்த 9 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தபோது முடியாததால், அறிமுகமில்லாத நபரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த நபர் பல்வேறு காரணங்களைக் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார். பின்னர், மீண்டும் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இது குறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங்கில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ரூ.2.50 கோடியை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.