Election Commissioner coming to Tamil Nadu for assembly elections
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக - பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், சீமான் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தேர்தலை எதிர்நோக்கி தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் வரும் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளனர். தமிழகம் வரும் அவர்கள், சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர்.
தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் துறையினர், வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இந்திய துணை தேர்தல் ஆணையர் மனிஷ்கர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us