பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்திலும், பீகார் சட்டப்பேரவைக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் ஒன்று அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மற்றும் வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களுக்கு பயந்து அவர்களை திருப்திப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் அரசியலமைப்பை மீற வேண்டுமா?. நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அவசியமா?

Advertisment

சிறப்பு தீவிர திருத்தம் முதலில் பீகாரில் நடக்கும். அதன் பின்னர் இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் ஆகியவர்களை நாடு முழுவதும் கண்டறியப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலால், நியாயமான தேர்தல்களுக்கும் வலுவான ஜனநாயகத்திற்கும் அடித்தளம் அமைக்கும் அல்லவா?. ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். நாம் ஒன்று கூடி அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு இந்த முக்கியமான கேள்விகளை ஆழமாக சிந்திக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.