Election Commission issues orders to 5 states for Assembly elections
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, விருப்ப மனு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாகவும் மும்முரமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒரே மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என 5 மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றோருக்கும் மே மாத இறுதிக்குள் பதவியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாத சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் மூலமாக தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us