தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (22.02.2026) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குனர் பி. பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய வட்டமேஜை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. 

Advertisment

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர்களின் (SECs) தேசிய வட்டமேஜை மாநாட்டை வரும் செவ்வாய்க்கிழமை, அதாவது பிப்ரவரி 24 அன்று புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்த உள்ளது. இந்த வட்டமேஜை மாநாடு 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டப்படுகிறது. கடைசியாக இத்தகைய மாநாடு 1999ஆம் ஆண்டு நடைபெற்றது.இந்த வட்டமேஜை மாநாட்டிற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை தாங்குவார். தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

Advertisment

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் தங்களின் சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் இதில் பங்கேற்பார்கள். அனைத்துமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 36 தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் (CEOs) இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள். தேர்தல் நடைமுறைகள் மற்றும் தளவாடங்கள் தொடர்பாக, அந்தந்த சட்டக் கட்டமைப்புகளுக்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பை (synergies) வளர்ப்பதே இந்த வட்டமேஜை மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். 

bh-vote--counting
கோப்புப்படம்

இந்த ஆலோசனைகள் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்கும் என்றும், தேர்தல் மேலாண்மையில் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துவதுடன், தொழில்நுட்பம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.சமீபத்தில் தொடங்கப்பட்ட இ.சி.ஐ. நெட் (ECINET) டிஜிட்டல் தளம் மற்றும் தேர்தல் சேவைகளை நெறிப்படுத்துவதில் அதன் மாற்றத்தக்க திறன் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு முயற்சிகள் குறித்து ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கக்காட்சிகளை (presentations) வழங்குவார்கள். 

Advertisment

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVMs) நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விளக்கக்காட்சிகள் சிறப்பித்துக் காட்டப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950ன் அடிப்படையில் வாக்காளர்களின் தகுதி குறித்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான ஒப்பீட்டு விளக்கக்காட்சியும் வழங்கப்படும். இது பல்வேறு அதிகார வரம்புகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்புகள் குறித்த தகவலறிந்த ஆலோசனைகளை எளிதாக்கும்.

bh-voting
கோப்புப்படம்

73 மற்றும் 74வது அரசியலமைப்புத் திருத்தங்களின் அதிகாரமளிக்கும் விதிகளின் கீழ் அந்தந்த மாநிலச் சட்டங்களால் மாநிலத் தேர்தல் ஆணையங்கள் உருவாக்கப்படுகின்றன. 243 கே  மற்றும் 243 இசட்.ஏ. ஆகிய பிரிவுகளின் கீழ் முறையே பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கும், வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும், மேற்பார்வை செய்தல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.