Election Commission announces special camps at polling stations to add new names in SIR
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியானது.
அதில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆருக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் முகாம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய சனி, ஞாயிறுகிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us