ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனி, கொங்கு நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 80). இவர், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர், இன்று (21.01.2026) காலை முனிசிபல் காலனி மெயின்ரோட்டில் தள்ளுவண்டியுடன் சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வாடகை கார் ஒன்று அர்ஜுனன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில், பலத்த காயமடைந்த முதியவர் அர்ஜுனனை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாடகை காரை ஈரோடு பஸ் நிலையம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்து, ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபர் ஈரோடு மூல கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 20) என தெரிய வந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் அர்ஜுனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us