கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குத் தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் (21.01.2026) திருவனந்தபுரத்திலிருந்து மாலை மூன்று மணியளவில் விரைவு ரயில் ஒன்று புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும் சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அந்த ரயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது, அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண், கத்திக் கூச்சலிட்டுள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார், அந்த நபரைக் கைது செய்தனர்.
அதன் பின்னர், அவரை சேலம் ஜங்சன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் திருவள்ளூரைச் சேர்ந்த அருளானந்தம் (வயது 63) என்று தெரியவந்துள்ளது. மேலும், நடந்த குற்றச் சம்பவம் குறித்து அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us