அதிக சர்க்கரை நிறைந்த தேவையான உப்புகளின் அளவு குறைந்த பானங்கள் ஓ.ஆர்.எஸ் கரைசல் என்ற பெயரில் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து ஹைதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி என்பவர் கடந்த எட்டு வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.
ஓஆர்எஸ் எனப்படும் வாய் வழியாக எடுத்துக் கொள்ளக்கூடிய நீர் ஏற்ற கரைசல் விவகாரத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தற்போது சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள தரநிலையை எட்டாத பானங்களில் ஓஆர்எஸ் என்ற சோலை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் தங்களுடைய பானத்துடன் சேர்த்து ஓஆர்எஸ் என்ற சொல்லை பயன்படுத்த கொடுக்கப்பட்டிருந்த அனுமதிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்த உத்தரவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படும்போது தரமான ஓஆர்எஸ் கரைசல் கொடுக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 8 ஆண்டுகளாக குழந்தை நல மருத்துவர் சிவரஞ்சனி நடத்திய இந்த சட்டப்போராட்டத்தில் வெற்றி கிடைத்த நிலையில் வீடியோ வெளியிட்டடுள்ள அவர் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.