Edappadi Palaniswami's speech in the Assembly regarding Tamil Nadu's debt burden
இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விவாதத்தின் போது நேற்று திமுக - அதிமுக இடையே காரசார வாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில் அவர் பேசியதாவது, “ஏறக்குறைய 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி எனது பொறுப்புக்கு வந்த போது நான்கு ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் சிறந்த ஆட்சியை கொடுத்தேன். புயல் பாதிப்பு, கொரோனா போன்ற காலங்களில் கூட நிர்வாக திறன்மிக்க ஆட்சியை கொடுத்தேன். ஆனால் தற்போது நிலவக்கூடிய ஆட்சியில் கடன் சுமையில் இருக்கிறது. ஒரு அரசினுடைய நிதிநிலை அறிக்கை என்பது வருவாய் மற்றும் செலவு இரண்டுக்கும் இடையில் எப்படி சமன் செய்யப்படுகிறது என்பதை சொல்ல வேண்டும். வரவு செலவை சமன் செய்வதை குறிக்கும் ஆவணம் தான் நிதிநிலை அறிக்கை.
நிதி பற்றாக்குறை இருக்கலாம், ஆனால் வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது. இந்த பட்ஜெட்டில் நிதி மேலாண்மை சதவீதத்தை குறிப்பிடுவது அவசியம். இந்த நிதிநிலை அறிக்கை மூலம் 19 ஆயிரம் கோடி கடன் அதிகரித்துள்ளது. வருவாய், பற்றாக்குறையும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் நிதி மேலாண்மை சீர் செய்ய குழு அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. அதன்படி முன்னாள் ஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம ராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஐந்து ஆண்டுகளில் வருவாயை பெருக்க என்ன யோசனை தெரிவித்தது? கண்மூடித்தனமாக கடன் வாங்க, அந்த குழு தான் யோசனை தெரிவித்ததா? தமிழ்நாட்டினுடைய நிதிநிலை மிகவும் மோசமான சூழலில் இருக்கிறது. அதுவும் கடன் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரக்கூடிய சூழலில் இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டினுடைய கடன் விகிதம் 10 லட்சம் கோடி என்ற அளவில் தாண்டி இருக்கிறது. 5 லட்சம் கோடி கடன் பெற்று இந்தியாவில் கடன் பெறுவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது” என்று சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Follow Us