Edappadi Palaniswami's criticized Mk Stalin in erode
சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று (08-03-26) எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதில் அவர் பேசுகையில், “திமுக தீயசக்தி அதை வேரோடு தமிழகத்தில் அழிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தார். எதற்காக இந்த இயக்கத்தை தோற்றிவித்தாரோ, எந்த கட்சியை தமிழகத்திலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்த கட்சியில் நேற்றைய தினம் ஓபிஎஸ் அடைக்கலம் புகுந்திருக்கின்றார். நான் ஏற்கனவே குறிப்பிட்டேன், பி டீம் பி டீம் என்று. இப்பொழுது பி டீம் நிரூபணமாகிவிட்டது. திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தூண்டுதல் பெயரில் நம்முடைய இயக்கத்திற்கு பல்வேறு இடையூறுகளை செய்தார். வழக்கு மேல் வழக்கு போட்டு இந்த இயக்கத்தை முடக்க பார்த்தார். அத்தனையும் மக்களுடைய துணை கொண்டு, இறைவனுடைய துணை கொண்டு கழக நிர்வாகிகளை துணை கொண்டு அத்தனையும் தவடுபொடி ஆக்கப்பட்டது. அதிமுக இயக்கத்திற்கு யார் யாரெல்லாம் துரோகம் செய்ய நினைத்தார்களோ, அவர்களை எல்லாம் நம்முடைய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அதிமுக ஒரு தூய்மையான இயக்கமாக, எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்ற இயக்கமாக, எத்தனை சோதனை வந்தாலும் அத்தனை சோதனைகளை வென்று இன்றைக்கு தமிழகத்தில் ஒரு வலிமையான இயக்கம் அதிமுக இயக்கம்.
ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எவ்வளவோ பீ டீமை தூண்டிவிட்டு பார்த்தார், அத்தனையும் நாம் முறியடித்துவிட்டோம். மக்களுடைய செல்வாக்கு மிக்க இயக்கம் அதிமுக இயக்கம். எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழித்துவிட முடியாது. இந்த இயக்கத்தில்தான் உழைக்கின்றவருக்கு மரியாதை கிடைக்கும். நம்மை போல் இருக்கின்ற சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவிக்கு வர முடியும் ஒரே இயக்கம் அதிமுக இயக்கம். சாதாரண கிளை செயலாளர் கூட இந்த இயக்கத்தில் இருந்து சிறப்பாக பணியாற்றினால் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன் முதலமைச்சரே ஆகலாம். திராவிட முன்னேற்ற கழகத்தில் ஆக முடியுமா? கலைஞர் குடும்பத்தில் பிறந்தால் கட்சியில் தலைவராகலாம். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் முதலமைச்சர் ஆகலாம். மற்றவர்கள் எவராலும், கட்சிக்கு உழைத்தாலும் எந்த பதவிக்கும் கட்சியிலும் வர முடியாது, உயர்ந்த பதவிக்கு ஆட்சி அதிகாரத்திலும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றாலும் மத்தியிலும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும். அப்படிப்பட்ட கட்சி திமுக கட்சி. ஆகவே அதிமுகவை பொறுத்தவரைக்கும் உழைக்கின்றவனுக்கு உரிய மரியாதை கிடைக்கக்கூடிய ஒரே இயக்கம்.
கலைஞர் இருந்தார். அதற்கு பிறகு ஸ்டாலின் துணை முதலமைச்சராக அப்பொழுதே தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு கலைஞர் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் திமுகவுடைய தலைவரானார். கலைஞர் உயிரோடு இருக்கின்றவரை அவர் ஸ்டாலினை நம்பவில்லை, திமுக தலைவராக்கவில்லை. இரண்டு ஆண்டு காலம் கலைஞர் வெளியில் வர முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அப்போது கூட ஸ்டாலினை நம்பி கட்சியை கொடுக்கவில்லை, செயல் தலைவராகத்தான் ஆக்கினார். கலைஞரே நம்பாத ஒரு நபர் என்றால் அது ஸ்டாலின் தான். உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு போனாரா? அல்லது அந்த கட்சியில் பாடுபட்டாரா? உழைத்தாரா? அந்த கட்சியில் எவ்வளவோ பேர் திமுகவுக்கு தியாகம் செய்தவர்கள் இருக்கின்றார்கள். எமர்ஜென்சியின் போது கைது செய்யப்பட்டார்கள், மிசாவில் கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் கிடைக்கவில்லை. திமுகக்கு உழைத்து ஓடாய் போய் தேர்ந்தவர்களுக்கு எல்லாம் திமுகவில் இடமில்லை. ஆனால் கலைஞர் குடும்பத்தில் பிறந்த உதயநிதிக்கு மட்டும் துணை முதலமைச்சர் கொடுத்திருக்கின்றார். இப்படிப்பட்ட இயக்கம் மீண்டும் தொடர வேண்டுமா? குடும்ப ஆட்சி தொடர வேண்டுமா? வாரிசு அரசியல் தொடர வேண்டுமா? கலைஞர் குடும்பம் ராஜ பரம்பரை குடும்பமா?
இந்த இயக்கத்துக்கு யார் யாரெல்லாம் துரோகம் விளைவித்தார்களோ அவர்களை எல்லாம் நாம் நீக்கினால், நீக்கப்பட்டவர்களை ஸ்டாலின் சேர்த்து கொண்டிருக்கின்றார். ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு ஆப்பு வைக்கிறதே இந்த செந்தில் பாலாஜியாக தான் இருக்கும். செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டப்பட்ட கட்சி அதிமுக கட்சி. அதிமுக தொண்டன், தலைமை, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது. அப்படிப்பட்ட கட்சிக்கே துரோகம் விளைவித்த செந்தில் பாலாஜியை நீங்க உயர்ந்த இடத்தில் வைத்து அவருக்கு பாராட்டு நடத்திட்டு இருக்கீங்க. ஸ்டாலின் அவர்களே, ஆபத்தை நீங்கள் உணராமல் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். செந்தில் பாலாஜி மூலமாகத்தான் உங்களுக்கு ஆப்பு அடிக்க போகிறார்கள். ஸ்டாலின் அவர்களே, எங்கள் கட்சியை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், உங்கள் கட்சியை கவலைப்பட்டு காப்பாற்ற பாருங்கள். இங்கிருந்து போனவர்களெல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை” என்று பேசினார்.
Follow Us