தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (04-02-26) அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதில், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 உயர்த்தப்படும், ஜல்லிக்கட்டில் வீரர்கள் காளை பிடிக்கும் பொழுது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும், மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அரசே ஏற்கும், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக அதிமுகவை ஊழல் கட்சி என்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவர் பொதுவெளியில் வந்து பார்த்தால் தான் தெரியும். பொதுவெளியிலே வரவில்லை. கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களாக ஒரு கட்சி தலைவர் வெளியே வரவில்லை. நாட்டில் என்ன நடக்குது என்று அவருக்கு தெரியவில்லை. எந்தெந்த கட்சி எந்தெந்த கட்சியுடன் கூட்டணி இருக்கிறது என்று தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்கி இருக்கிறது என்று தெரியவில்லை. அவருக்கு ஒன்னுமே தெரியாத போது எங்களிடம் கேட்டால் எப்படி? அவரிடம் போய் கேள்வி கேளுங்கள். ஏற்கெனவே அதிமுக கூட்டணி அமைக்கின்ற போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நானும் என்னுடைய மூத்த நிர்வாகிகள் எல்லாம் கலந்து கொண்டோம்.

அமித் ஷா அளித்த முதல் பேட்டியிலேயே அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டும் இணைந்து புதிய கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும், எங்களுடைய கூட்டணியின் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுப்படுத்திவிட்டார். இதை அவர் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை, பார்ப்பதற்கு நேரமில்லை. மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளவும் இல்லை. ஒரு கட்சியினுடைய தலைவர் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். தெரியாமல் அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். நாட்டில் நடக்கிற நிலவரம் என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. இப்படி ஒரு தடவையாவது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச சொல்லுங்கள். எங்களை எல்லாம் ஊழல் சொல்வதற்கு வழியே கிடையாது. ஜெயலலிதாவை அவர் ஏற்றுக்கொள்கிறார், ஜெயலலிதா தான் ரோல் மாடல் என்கிறார். யாரை (செங்கோட்டையன்) கூட வைத்திருக்கிறார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலில் இருந்து வெளியே வந்திருக்கிறார்” என்று கூறினார். 

Advertisment