மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடித்து கடந்த 1975இல் வெளியான படம், ‘இதயக்கனி’. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இப்படம், அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தது. 

Advertisment

இந்த படம், சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் உள்ள திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 200 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (17-02-26) சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு வருகை தந்து பார்த்தார்.

Advertisment

அதன் பின்னர் தியேட்டர் அரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி, 1975ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலிஸ் செய்யப்பட்டு இன்று 225 நாட்கள் என்ற சாதனை படைத்திருக்கிறது. இந்த படம் எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி அவரது மறைவுக்கு பிறகும் ரெக்கார்ட் பிரேக் சாதனை படைத்திருக்கிறது. அந்த அளவுக்கு அவர் இறந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு எம்.ஜி.ஆர் பெயரை சொல்லாமல் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி யாரும் நிலைத்திருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்கள் சக்தி படைத்த தலைவர் அவர்.

எம்.ஜி.ஆர் பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர் தான். சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார், நிஜமாகவே உச்சத்தில் இருந்த போது சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர். சினிமாவை பள்ளிக்கூடம் போன்று மாற்றியவர். தன்னுடைய ரசிகன் தன் திரைப்படத்தை பார்த்து கெட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்டவர். அதனால் தான் ஒரு திரைப்படத்தில் கூட அவர் குடிப்பது போன்றோ புகை பிடிப்பது போன்றோ வன்முறையை தூண்டுகின்ற ஒரு காட்சி இடம்பெறவில்லை. தலைவர்கள், அறிஞர்கள் சொன்ன கருத்தை எல்லாம் சினிமாவில் எளிமையாக சொன்னார். அதனால்  தான் அவரை வாத்தியார் என்று அன்போடு மக்கள் அழைத்தார்கள். இன்றைக்கு யார் யாரோ திரைப்படத்தில் நடித்துவிட்டு எம்.ஜி.ஆர் போல் கனவு கான்கின்றார். ஒருபோதும் கனவு நனவாகாது” என்று தெரிவித்தார். 

Advertisment