Edappadi Palaniswami spoke harshly DMK is the only party that is corrupt in the air
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “தேசிய ஜனநாயக கூட்டணியுடைய இரண்டாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நம்முடைய எதிர் தரப்பில் இருக்கின்ற திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி இதுவரை பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கின்ற கட்சிகள்தான் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்திய திருநாடே தமிழகத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தை யார் ஆள வேண்டும்? யார் ஆளக்கூடாது என்பதற்கு நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர இருக்கின்றன. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்காக அமைத்த கூட்டணிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. எங்கள் கூட்டணியில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் எல்லாம் இணைந்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து 234 தொகுதிகளிலும் தேனீக்களை போல, எறும்பை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்படுகின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு நாம் அத்தனை பேரும் உழைக்க வேண்டும். நம்முடைய கூட்டணி, நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சுமார் 210 இடங்களில் வென்று அதிமுக அமைக்கும்.
அதிமுகவை பொறுத்தவரைக்கும் சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. எங்களுடைய தலைவர்கள் வகுத்த பாதையில் அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மோடி, பாரத பிரதமராக பொறுப்பேற்றவுடன் இன்றைக்கு இந்திய நாடே வளர்ச்சி அடைந்திருக்கின்றது. உலக நாடுகள் திரும்பி பார்க்கின்ற அளவுக்கு இந்திய நாட்டினுடைய வளர்ச்சி பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டை கண்டு பொறாமைப்படுகின்ற அளவிற்கு உலக நாடுகள் இருக்கின்றன. அந்த அளவுக்கு வளர்ச்சியை கொடுத்திருக்கின்றார். மத்தியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்த வளர்ச்சியும் கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் ஒரு தவறான அவதூறான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். இன்றைக்கு மேடைக்கு வருவதற்கு முன்பு நம்முடைய பாரத பிரதமர் 4,400 கோடியை வளர்ச்சி திட்டங்களுக்காக கொடுத்துவிட்டு தான் இங்கே வந்து அமர்ந்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வருகின்ற போது ஆயிரக்கணக்கான கோடியை ஒதுக்கி தமிழ்நாடுடைய வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மத்திய அரசை அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். ஸ்டாலின் அவர்களே, 15 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்கள். தமிழகத்திற்கு எந்த நிதியை கொடுத்தீர்கள்? என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? அதனால் தமிழக மக்கள் எந்த ஏற்றம் பெற்றார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? குடும்பத்தில் இருக்கின்ற உறுப்பினர்கள், மத்தியில் அமைச்சராக வந்தார்கள், அதிகாரத்திற்கு வந்தார்கள், கொள்ளை அடித்தார்கள். அதுதான் உங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடாக இருந்தது.
காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி. 2ஜி செக்டர் ஊழல் 1,74,000 கோடி ஊழல் செய்தகட்சி திமுக கட்சி. மத்தியில் அமைச்சர் கிடைத்தாலும் அங்கேயும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக கட்சி. இன்றைக்கு விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கின்ற கட்சி என்று சொன்னால் அது திராவிட முன்னேற்ற கழகம். இந்தியாவில் எத்தனையோ மாநிலம் இருக்கின்றன. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். அப்படி ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த அரசாங்கம். அந்த அரசாங்கத்தைதான் நாம் அகற்றப்பட வேண்டும் என்று ஒவ்வொருவரும் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இந்த தென் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். பாரத பிரதமரிடம் கோரிக்கை ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மத்திய அரசு மூலமாக பெற்றோம். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற முடியவில்லை” என்று பேசினார்.
Follow Us