Advertisment

“எங்கள் குருதியில் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்” - எடப்பாடி பழனிசாமி

103

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Advertisment

அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது" என்கிறார்.அண்ணா பெயரை உச்சரிக்க,  கலைஞரின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? “அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கலைஞர் மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான். தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்.

திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதேசமயம், முருகன் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்து ஒலிப்பரப்பட்ட வீடியோ குறித்து இதுவரை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த வித எதிர்ப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

dmk admk Anna b.j.p edappadi k palaniswami mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe