தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, நாளை (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளைக் கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisment

அதற்காக அதிமுக - பா.ஜ.க ஆகிய கட்சிகள் பிற கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கெனவே அன்புமணி தரப்பு பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், நேற்று அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் நேற்று இணைந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

Advertisment

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று (22-01-26) சந்தித்துப் பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்த பியூஷ் கோயல், அவருடன் அதிமுக - பா.ஜ.க இடையேயான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் உடன் இருந்தனர். அவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளித்தார்.

அதனை தொடர்ந்து பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “நாளை நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன. நாளை நடைபெறுகின்ற கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற கூட்டமாக இருக்கும். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக அமையும். இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை. இந்த அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியை கண்டுவிட்டது. எல்லா துறைகளிலும் ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Advertisment

எங்களுடைய கூட்டணி வலிமையான கூட்டணி. பிரதமர் இந்திய நாட்டினுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்ல, மேக் இன் இந்தியா அதை நடைமுறைப்படுத்தி இந்தியாவை எதிர்காலத்தில் ஒரு வல்லரசு நாடாக உருவாக்குவதற்கு அனைத்து முயற்சியும் எடுத்துக் கொண்டிருக்கின்றார். அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலவும். அப்பொழுது தமிழகம் மிகப்பெரிய ஏற்றத்தை பெறும், மிகப்பெரிய வளர்ச்சி பெறும். இதுநாள் வரை இல்லாத ஒரு வளர்ச்சியை இந்த தேர்தல் மூலமாக வெற்றி பெற்று மக்களுக்கு வழங்கும்” என்று கூறினார்.