திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் 27 ஆம் தேதி வடமாநில இளைஞர் சூரஜ் (34) என்பவரை, கஞ்சா போதையில் 17 வயதுடைய 4 சிறுவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே திருத்தணி ரயில் நிலையத்தில் பட்டுப்புடவை வியாபாரி ஒருவரை, 2 இளைஞர்கள் சரிமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அந்த நபர் மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திருப்பூரில் தலைமை காவலர் ராமகிருஷ்ணன் என்பவரை இளைஞர் ஒருவர் நேற்று இரவு கத்தியுடன் விரட்டியுள்ளார். இதில் அச்சமடைந்த அந்த காவலர், பெல்ட்டை வீசியபடியே அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதன் பின்னர், அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி ரயில் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவங்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா? ‘தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை’ என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா? கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும். 2026 விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/ed-2025-12-31-15-33-40.jpg)