நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் தொழிலாளரின் 7 வயது மகள், நேற்று இரவு அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாயமாகியுள்ளர். இதனை அறிந்த உறவினர்கள் அங்கம்பக்கத்தில் தேடியபோது அந்த சிறுமி அழுது கொண்டே வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் உடைகளில் ரத்தக் கறைகள் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு குமாரப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த போது அவருக்கு யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து குமாரப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனை அறிந்த போலீசார் உடனடியாக, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு இளைஞர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான காட்சிகள் இருந்தது. அதன்படி அந்த இளைஞரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையில், சின்னப்பநாயக்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய ஒரு நபர் இருப்பதாகக் கூறி அந்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்திருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளதாக உலகமகளிர்தினமான இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.

ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே? ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா? குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் ,ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment