தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மாதவரம் தொகுதியில் இன்று (22-02-26) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Advertisment

அதில் அவர் பேசியதாவது, “2021இல் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்து மக்களை ஏமாற்றியது துரோகி ஸ்டாலின். 73 ஆண்டு காலம் பல்வேறு கட்சிகள் தமிழகத்தை ஆண்டன. அந்த 73 ஆண்டு காலத்தில் 2021 வரை தமிழ்நாட்டுடைய கடன் 4லட்சத்து, 85 ஆயிரம் கோடி. ஆனால், ஐந்தே ஆண்டில்  திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்த துரோகி ஸ்டாலின். நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என்று சொல்லி பெண்களுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு மறந்த துரோகி ஸ்டாலின். இப்படி துரோகத்தினுடைய மொத்த உருவம் தான் ஸ்டாலின். இப்போது தான் ஸ்டாலினுக்கு பயம் வந்திருக்கிறது. ஆட்சி போயிடும் என்ற பயம் இப்போது தான் வந்திருக்கிறது.

Advertisment

ஆட்சியே போனாலும் பரவாயில்லை, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்கிறார். ஆட்சியே போன பிறகு நீ யாருக்கும் பயப்பட போற? ஸ்டாலினே உண்மையை ஒத்துக்கொண்டார், ஆட்சி போகப்போகிறது என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டார் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் அதைத்தான் உங்களுக்கு வழங்குவார். எடப்பாடி பழனிசாமி பயந்தாங்கொள்ளி என்கிறார். நான் மட்டுமல்ல, எங்களுடைய தொண்டன் கூட பயப்பட மாட்டான். சொந்த காலில் நிற்கின்ற கட்சி அதிமுக, உன்னை போல பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் முதுகிலே ஏறி சவாரி செய்கின்ற கட்சி, அதிமுக அல்ல. உழைப்பை நம்பி இருக்கின்ற கட்சி. ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை குறைத்து எடை போட வேண்டாம். திமுகவுக்கு பயம் இருக்கலாம். தேர்தல் தோல்வி என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. அதனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். உங்குடைய அரசாங்கம் அப்படியா இருக்கிறது? கொள்ளை அடிக்கின்ற அரசாங்கமாக இருக்கிறது. எந்தெந்த துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கொள்ளை கூட்டமாக இன்றைக்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் அரசாங்கம் இருக்கின்றதா? இல்லையா? என்று மக்கள் கேட்கின்ற அளவிற்கு அரசு இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று காட்டமாக பேசினார். 

Advertisment