Edappadi Palaniswami alleged that law and order has deteriorated under the DMK regime
மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி அருகே தனியார் பள்ளி வாகனத்தை, போதை இளைஞர்கள் வழிமறித்து கற்களை வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்கு பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் இளைஞர்கள் சிலர், பள்ளி வாகனத்தை மறித்து திடீரென்று கல் வீசிதாக்குதல் நடத்தினர். இந்த கல் வீச்சு சம்பவத்தால் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், அவர்கள் பேருந்தின் வைபர்களையும் உடைத்தனர். இந்த தாக்குதலின் போது பேருந்தின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் அலறி துடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது. பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் சட்டம்- ஒழுங்கு.
குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us