இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் அனில் அம்பானி. இவரது நிறுவனங்கள் வங்கிகளில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு இவரை ‘மோசடி நபர்’ எனப் பாரத ஸ்டேட் வங்கி (SBI) அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மும்பை மற்றும் டெல்லியில் இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி (24.07.2025) சோதனை நடத்தியிருந்தனர்.
அதாவது ராகா நிறுவனங்களில் (RAAGA companies - Reliance Anil Ambani Group Companies) எழுந்த சட்டவிரோத பண மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஆகஸ்ட் 5ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்ததுறையின் சம்மனை ஏற்று 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் அமலாக்கதுறை விசாரணைக்கு அனில் அம்பானி இன்று (05.08.2025) நேரில் ஆஜராகியுள்ளார். இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்ததுறை அலுவலகத்தில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்ததுறை விசாரணை நடத்தி வருகிறது.