ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று (01.09.2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதனால் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபடேர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலநடுக்கங்களின் பாதிப்புகள் அதிகம் காணப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் முதற்கட்டமாக 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது அதோடு 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டது. அதே சமயம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்பட்டது. எனவே தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தான் இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.
இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. மேலும், காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 1,000 கூடாரங்கள், 15 டன் உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரண உதவியாக இந்தியா அனுப்பியுள்ளது.
மேலும், தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது. இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக 1400 பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதோடு 2000ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.