மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் “இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) விளங்கும் மற்றும் நிதி அமைச்சர் உட்பட பல தேச மற்றும் சர்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
மேலும், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சிப்காட் (SIPCOT) பகுதியை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் தொழில் மையமாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். 2026 ஒன்றிய பட்ஜெட்டில் இந்திய குறைக்கடத்தி பணிகளுக்கான கட்டம் 2.0 (India Semiconductor Mission Phase 2.0) திட்டத்தின் கீழ் ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த திட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சிப்காட்டில் முதலீடுகளை கொண்டுவர முக்கியத்துவம் கொடுக்கக் கோரிக்கை விடுத்தேன். இது குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை வைத்ததையும் தெரிவித்து கொண்டேன். இந்த கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் தங்களது மதிப்புமிக்க கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கி, மிகுந்த அக்கறையுடன் அணுகியதை குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும், சென்ற கூட்டத் தொடரின்போது எனது தொகுதி உட்பட நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைபடும் அரிய மண் தாதுக்கள் இறக்குமதி செய்து கொடுப்பதில் இருந்த தடைகள் குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து, நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் உயர் செயலதிகரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். உடனடி கொள்கை மாற்றங்கள் செய்து கொடுத்த அதிகாரிகளுக்கும் அமைச்சரிடம் நன்றி தெரிவித்து கொண்டேன். திருச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட நிதியமைச்சருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us