Advertisment

ரயில்வே அலுவலக நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர்; துரை வைகோ கண்டனம்!

duraivaisi

Durai Vaiko Condemns Trichy Zonal Railway Office Entrance Signed in Hindi

திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் (Kartavya Dwar ) என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கர்தவ்ய த்வார் என்பதற்குத் தமிழில், ‘கடமையின் நுழைவு வாயில்’ என்று பொருள்படும். மும்மொழியில் வார்த்தை இடம்பெற வேண்டும். ஆனால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழியிலுமே, கர்தவ்ய த்வார் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததால் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழகத்தைச் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டு ,தெற்கு ரெயில்வே நிர்வாகம் அதற்கு, ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் சூட்டியுள்ளது. ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில், கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள். தமிழில் பொருள் விளங்க பெயர் சூட்டாமல் அப்படியே இந்தி பெயரை நுழைவாயிலில் பொறித்து இருப்பது ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்தி திணிப்பையே காட்டுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

Advertisment

ஒன்றிய அரசு மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் பெயர்கள், அவற்றின் கொள்கை விளக்கங்கள் ஆகியவை, 2014-ம் ஆண்டில் பாஜக ஒன்றிய அரசில் பொறுப்பேற்ற பிறகு இந்தியில் மட்டுமே பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான விளம்பரங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் ஆகியவை இந்திப் பெயர்களையே தாங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, (பிரதமரின் மக்கள் நிதி திட்டம்), பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீட்டுத் திட்டம்)  பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பயிர் காப்பீட்டுத்திட்டம்), பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா (மலிவு விலை மருந்து கடைகள் திட்டம்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற பல திட்டங்களும் தமிழ்நாட்டில் இந்தி பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.

சென்னை-நெல்லை இடையிலான ரயில் சேவைக்கு, ‘அந்த்யோதயா’ என்றும், மதுரை-சென்னை இடையிலான அதிவேக ரயில் சேவைக்கு, ‘தேஜஸ்’ என்றும் இந்தியில் தான் பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கெனவே ஒன்றிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகிய அனைத்து மாநில மக்களும் அணுக வேண்டிய அமைப்புகளில் இந்தி மொழியை வலுக்கட்டாயமாக பாஜக அரசு திணித்து வருகிறது. ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்றவை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், என ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ எனப் பெயர் மாற்றம்  செய்து பாஜக அரசு இந்தி மொழி திணிப்பைத் தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு ரயில்வே இந்தி திணிப்பை செயல்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயரைப் பொறிக்க தெற்கு ரயில்வே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

railway station Hindi imposition trichy durai vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe