Due to irregularities in TNPSC Group 2 exam, the controller of examinations has replaced
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற குருப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (08-02-26) காலை தேர்வு நடைபெற இருந்தது. அப்போது, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 9 மணியைக் கடந்தும் வினாத்தாள் வரவில்லை எனப் புகார் எழுந்தது.
இதனால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரும்பாக்கம், நந்தனம் ஆகிய பகுதிகளில் குருப் 2 தேர்வின் போது குளறுபடி ஏற்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வேறு ஒரு நாளில் வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முகசுந்தரம் பிறப்பித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றிய சண்முகசுந்தரம் ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இருந்த வெங்கடபிரியா ஐஏஎஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Follow Us