Drug issue; AIADMK leader Prasad admitted to hospital Photograph: (police)
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ஏ1 குற்றவாளி பிரதீப் குமார் கொடுத்த தகவல் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர். ஏ2 குற்றவாளியாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் உள்ளார். ஏ3 குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த்தை சேர்த்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. Narcotic Drugs And Psychotropic Substances Act- NDPS 8(C), 29(1), 22(b) உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரசாத் ஏற்கனவே வழக்கு ஒன்றில் சிறையில் உள்ளார்.
பிரசாத் தயாரித்த படத்தில் ஸ்ரீகாந்த் நடித்த போது 10 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை பணத்திற்கு பதிலாக பிரசாத் போதைப் பொருளாக கொடுத்து கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் தானே போதைப்பொருளை கேட்டு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஸ்ரீகாந்த் போலீசார் விசாரணையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பிரசாத்தையும் போலீசார் இந்த போதைப்பொருள் வழக்கில் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டு வருகின்றனர். அதேநேரம் இதில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவரின் ஜாமீன் மனுவையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.