சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை அன்று படகு ஓட்டும் போது, வனத்துறை படகு ஓட்டுநர் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தார். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 10 பயணிகளை ஏற்றிக் கொண்டு சுரபுண்ணை வனக்காட்டிற்கு படகு சென்றது. படகை கிள்ளை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் ஓட்டிச் சென்றார். படகு வனக்காடுகளுக்கு சென்று திரும்பி வந்தது. படகு நிறுத்தும் இடம் அருகே வரும் போது, சங்கருக்கு திடீரென வலிப்பு வந்து மயங்கி தண்ணீரில் விழுந்தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் அலறினர். சுற்றுலாப் பயணிகளை சக படகு ஓட்டுநர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் மற்ற படகு ஓட்டுநர்கள் நீரில் மூழ்கிய சங்கரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.