மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு  கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்  ஒழிப்பரப்பட்ட வீடியோவில் பெரியார் அண்ணா குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. மேலும் திராவிடத்தை ஒழிப்போம் என்ற போஸ்டர்களும் ஓட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த மாநாட்டில்  அண்ணா பெயரை வைத்துள்ள அதிமுக கட்சியினரே பங்கேற்றது தமிழகம் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. அதேசமயம் திமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது வரை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து ஒரு கருத்து வராதது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த விவகாரத்தில் திமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பலரும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தும் பாஜக, சங்பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமமானது” என்று தெரிவித்துள்ளார். மேலும், முருக மாநாட்டில் பெரியாரை விமர்சித்த பின்னரும் விஜய் அமைதி காப்பது ஏன்? பெரியாரை விஜய் முழுமையாக ஏற்றுக்கொண்டாரா என்ற சந்தேகம் எழுகிறது; பாஜகவின் கொள்கைகளை மாற்று வடிவில் பேசுபவர்களை பாஜக பி டீம் என்று தான் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

த.வெ.க.வின் 5 கொள்கை தலைவர்களில் ஒருவராக இருக்கும் பெரியாரை முருகன் மாநாட்டில் விமர்சனம் செய்தது குறித்து தற்போது வரை அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் இருந்து ஒரு எதிர்ப்பு அறிக்கையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.