தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை குரல் காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (17-01-26) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகள் கேட்பது? உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அதேபோல கூடுதல் தொகுதிகளை கேட்பதிலும்,தமிழக வெற்றிக் கழகத்துடன் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று ராகுல்காந்தி நிர்வாகிகளை நோக்கிக்  கேட்டதாகவும் கூறப்படுகிறது.  

இந்த சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் நிர்வாகி கே.சி.வேணுகோபால் முன்னிலையில் மற்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கே.சி.வேணுகோபால், ''நிர்வாகிகள் அனைவரது கருத்துக்களையும் தலைமை பரிசீலிக்கும். காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி குறித்து கருத்துச் சொல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து அறிக்கைகள் விடுவது, வலைத்தளங்களில் பதிவிடுவது போன்று செய்ய வேண்டாம் என தலைமை அறிவுறுத்தி உள்ளது. கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கும். இதனைத் தமிழக காங்கிரஸ் பின்பற்றும்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment