கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
அந்த வீடியோவில், 'கரூரில் நடந்தது பெரும் துயரம், கொடும் துயரம். இதுவரை நடக்காத துயரம். இனி நடக்கக்கூடாத நிகழ்வு. மருத்துவமனைக்கு நான் நேரில் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகளவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும் தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே அன்று இரவே கரூருக்கு போனேன்.
Advertisment
குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்து அதை உடனடியாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம். நடந்த சம்பவம் தொடர்பான உண்மையான காரணத்தை ஆராய நீதியரசர் அருணஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆணையத்தின் உடைய அறிக்கையை அடிப்படையில் அரசினுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இதற்கிடையே சோசியல் மீடியாவில் சிலர் பரப்புகின்ற வதந்திகளையும், பொய் செய்திகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ் உறவுகளே. துயரம் சூழ்ந்திருக்கும் நிலையில் பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இனி வரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை பார்க்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. எனவே நீதியரசரின் அறிக்கை கிடைத்ததும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நடைமுறைகள் வகுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். 
Advertisment