Donald Trump hinted Big deal with India
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ‘பிக் பியூட்டிஃபுல் (Big Beautiful)’நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “எல்லோரும் ஒரு ஒப்பந்தம் செய்து அதில் ஒரு பங்கை பெற விரும்புகின்றனர். நேற்று தான் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. எங்களிடம் சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. எங்களுக்கு ஒரு சிறந்த ஒப்பந்தம் வரப் போகிறது, அது இந்தியாவுடன் இருக்கலாம். அது மிகப்பெரியது.
சிலருக்கு நாங்கள் கடிதம் அனுப்பி மிக்க நன்றி என்று கூறுவோம். அதில் நீங்கள் 25,35,25 சதவீதம் செலுத்த வேண்டும் என்று கூறுவோம். அவர்களிடம் நாங்கள் கண்டிப்பாக இருப்போம். இது தான் சுலபமான வழி. ஆனால், என் மக்கள் அந்த வழியில் செய்ய விரும்பவில்லை. அவர்கள் வேறு சிலவற்றை செய்ய விரும்புகிறார்கள். நான் செய்ததை விட அவர்கள் நிறைய ஒப்பந்தந்ததை செய்ய விரும்புகிறார்கள். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் மேற்கொள்வதில்லை. ஆனால், எங்களிடம் சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுனுடனும் மிக நல்ல உறவு உள்ளது.
முன்னதாக சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.