கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவர் 4 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின்னர் மாணவனுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு பின் மாணவனுக்கு ஊசி போட்ட இடத்தில் தொற்று ஏற்பட்டு வீங்கியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சென்ற மாணவனின் பெற்றோர், அங்கிருந்த மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் அலட்சியமாக பதிலளித்துள்ளார். 

நியாயம் கேட்க போன பெற்றோரிடம் பேசிய மருத்துவர், “அதைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. உங்ககிட்ட பேசனும்னு எனக்கு அவசியம் இல்ல. பணி செய்யவிடலன்னு உங்க மேலையே  கேஸ் போடுவேன். இரண்டு மணி நேரம் வேலை பார்த்துட்டு அரசியல் செல்வாக்கோடு வீட்டுக்கு கிளம்புகிற மருத்துவர்கள் எல்லாம் இங்கே இருக்காங்க. அதனால நீங்க மூடிட்டு கம்முனு இருங்க. எங்க வேணுனாலும்  வீடியோ போட்டு கோங்க.. என்று அலட்சியமாக பதிலளித்திருக்கிறார். இதனை மாணவனின் பெற்றோர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியிருக்கிறது.