திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக வீராசாமிநாதன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (21.02.2026) காலை வீராசாமிநாதனை பார்க்க வந்த மணி (வயது 22) என்ற இளைஞர் ஒருவர், அவருக்குப் பொன்னாடை போர்த்துவது போல் நடித்துள்ளார். அதோடு அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வீராசாமிநாதனை குத்தியுள்ளார். இதில் வீராசாமிநாதனுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளார்.
மற்றொருபுறம் இதனைக் கண்ட ஆதரவாளர் ராஜமுத்து என்பவர் இந்த சம்பவத்தை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும், மணி கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து கத்திக் குத்துக்கு ஆளான இருவரையும் உடனடியாக மீட்ட அவரது தொண்டர்கள் வீரசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டட்டனர்.
அதே சமயம் கத்தியால் குத்திய மணியை வேடசந்தூர் போலீசார் கைது செய்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதாவது எதற்காக மணி, வீராசாமிநாதனை கத்தியால் குத்தினார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் கத்தி குத்துக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வரும் சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் வீரா சாமிநாதன் போட்டியிடுவார் எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow Us